வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் வெளிவந்த மோசமான ஒலி நாடா தொடர்பில் சுயாதீன விசாரணை இடம்பெறும் என வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அறிக்கை விட்டுள்ளார்.
இதில் அறிந்த வகையில் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் பிரகாரம் வடமாகாண பிரதம செயலாளர், பிரதி பிரதம செயலாளர் ( நிர்வாகம்) மற்றும் ஒரு ஆணையாளர் , செயலாளர் உட்பட பலர் என அறியக் கிடைத்துள்ளது.
குறித்த உரையாடல்களில் பங்கு கொண்டவர்கள் என சந்தேகப்படும் நபர்கள் வடக்கின் நிர்வாக சேவை சிறப்புத் தரத்தில் இருப்பவர்கள்.

அவர்களை விசாரணை செய்ய வேண்டும் எனில் விசாரணை செய்வதற்கு ஏதுவாக வடக்கில் தற்போது இருப்பவர்களின் தராதரம் தொடர்பில் கேள்வி எழும், இதில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம செயலாளரை விசாரணை செய்வது யார்?
அத்துடன் விசாரணை என்று வந்தால் உயரதிகாரிகளாகிய அவர்களின் நிர்வாகத் தலையீடுகள் அதிகம் இருப்பதால் முதலில் சம்பந்தப்பட்டவர்களை அவர்களின் பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும் அல்லது இடமாற்றம் வழங்க வேண்டும் என்பதனையே தாபனவிதி ஏற்பாடுகள் கூறுகின்றது.
இவற்றையெல்லாம் செய்து பூனைக்கு மணியை கட்ட வேண்டியவர் யார்? ஆகவே நீதியாக விசாரணை நடைபெறுமா? என்பதே ஊழலுக்கு எதிரானது எனத் தம்பட்டமடிக்கும் அனுர அரசாங்கத்திற்கு முன்னுள்ள வினா?


