ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஆலோசகர் ஒருவரால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் முறைப்பாடொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
‘எகிபஸிக்கோ’ அமைதி நடைபயணத்தை செய்தியாக்கச் சென்ற அரசிற்குச் சொந்தமான ‘சண்டே ஒப்சேவர்’ பத்திரிகையைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக அந்தச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஆலோசகர் சந்தன சூரிய பண்டாரவின் இத்தகைய நடவடிக்கைகளை சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அவர் ஒரு அரச அதிகாரிக்குரிய அதிகார வரம்பைத் தாண்டிச் செயற்பட்டதாகவும், நிகழ்வின் போது தனியார் ஊடக நிறுவனமொன்றுக்கு தேவையற்ற முன்னுரிமை அளித்து முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
அச்சுறுத்தலுக்கு உள்ளான இரு ஊடகவியலாளர்களும் அரச ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆலோசகரும் ஜனாதிபதி ஊடகப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது ஒரு முரணான விடயம் என்று அந்தச் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அச் சங்கம், கடந்த கால அரசாங்கங்களின் ஊடக அடக்குமுறை நடைமுறைகளின் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவம் தெரிவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், பேச்சுச் சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் குறித்த அண்மைக்கால விவாதங்கள் மற்றும் வெளிப்பாட்டு விவகாரங்களில் கலாசார அமைச்சு பாதுகாப்பு அமைச்சின் உதவியை நாடுவதாக வெளியாகும் செய்திகள் ஆகியவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடகக் கொள்கை எவ்வழியில் செல்கிறது என்பதைக் காட்டுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் தமது தொழில்முறை கடமைகளை கௌரவத்துடனும் சுதந்திரத்துடனும் முன்னெடுப்பதை உறுதி செய்யவும், அரச அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் மற்றும் செயலாளர் ரங்க பண்டாரநாயக்க ஆகியோர் கையொப்பமிட்ட இக்கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


